செய்திகள்

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்

Published On 2018-06-13 18:34 IST   |   Update On 2018-06-13 18:49:00 IST
அதிமுக.வில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.
சென்னை:

அதிமுக.வில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் சென்று மனு அளித்தனர். 

இதனை அடுத்து, ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து 18-9-2017 அன்று சட்டசபை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நாளை காலை 10.30 மணியளவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது.
Tags:    

Similar News