சென்னை ஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படும்: தி.மு.க.வுக்கு அமைச்சர் பதில்
சென்னை:
சட்டசபையில் இன்று அனகா புத்தூர், பொழிச்சலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என்று பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (தி.மு.க.) துணைகேள்வி எழுப்பினார்.
அனகாபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 400 சதுரடியில் 6 படுக்கை வசதியுடன் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். இதே போல பொழிச்சலூர் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர்.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இட வசதியின்றி சிறிய கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என கேட்டார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், “இ.கருணாநிதி எம்.எல்.ஏ. குறிப்பிடும் ஆரம்ப சுகாதார நிலையங்களை இரண்டு முறை பார்வையிட்டேன். உறுப்பினர் சொல்வது உண்மைதான்.
சென்னை ஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.