செய்திகள்

ஊட்டி கோடப்பமந்து உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள்: கலெக்டர் வழங்கினார்

Published On 2018-06-08 17:13 GMT   |   Update On 2018-06-08 17:13 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சீருடையுடன் கூடிய பிளேசர் வழங்கி குழந்தைகளுடன் கலந்துரையாடி கூறியதாவது,

குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தோடும், கனவோடும் வாழ வேண்டும். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியமும் கனவும் இருக்கும். அந்த லட்சியத்தை அடைய வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்.

படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் எடுப்பது மட்டுமல்லாமல் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மென் மேலும் உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்து, உங்கள் கனவை நிறைவேற்றி வாழ்வில் முன்னேற முடியும்.

உங்களுக்கு பள்ளி பருவத்திலும் சரி எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையில் சிரமங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நாம் நினைத்ததை அடைய வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

காலம் மாறிக்கொண்டே போகின்றது எனவே காலத்திற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் மாற்றி கொண்டு உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் 165 குழந்தைகளுக்கு சீருடையுடன் கூடிய பிளேசர் உடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மேல் அக்ரஹாரம் பகுதியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News