திருப்பூர் அருகே குட்டையில் மூழ்கி மாணவன் பலி
திருப்பூர்:
திருப்பூர் அருகே உள்ள அங்கேரிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. பனியன் தொழிலாளி. இவரது மகன் அசோக் (11). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் அசோக் தனது நண்பர்களுடன் செட்டிப் பாளையம் வெங்கமேடு பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றான்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். அவன் தண்ணீரில் தத்தளித்தான். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங் கள் என சத்தம் போட்டான். அவனது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
குட்டையில் மூழ்கி அசோக் இறந்தான். இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அசோக் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் நேற்று இரவு வரை தேடியும் உடலை மீட்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது அசோக் உடல் சிக்கியது. அதனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.