கொடுமுடி அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பனப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது38). அரசியல் பிரமுகரான இவரது அண்ணன் தங்கவேல்.
ரமேஷ் கரூரிலும், தங்கவேல் காங்கயத்திலும் ஸ்டடி (கல்வி) நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இருவரும் அவ்வப்போது சொந்த ஊரான பனப்பாளையத்துக்கு சென்று வருவார்கள்.
நேற்று மாலை ரமேஷ் பனப்பாளையம் வந்திருந்தார். வீட்டை சுத்தம் செய்து விட்டு மஞசள் வாங்க கொண்டு வந்த ரூ.1½ லட்சத்தை ஒரு சூட்கேசில் வைத்து பீரோவில் வைத்தார். பிறகு கரூர் சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் 2 அறைகளையும் உடைத்தனர். பீரோவையும் உடைத்து அதில் இருந்த 3 பவுன் செயின், 2 வளையல், தோடு, மோதிரம் உள்பட 6¼ பவுன் நகைகள் கொள்ளையடித்தனர்.
பிறகு சூட்கேசை அப்படியே தூக்கி கொண்டு சென்றனர். சிறிய தூரம் சென்றதும் சூட்கேசை உடைத்து அதில் இருந்த 1½ லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சூட்கேசை தூக்கி வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.