முட்டை இறக்குமதிக்கு தடைவிதித்த சவுதி அரேபியா: காரணம் தெரியுமா?
- பறவைக் காய்ச்சல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்தது.
- பொதுமக்கள் பறவைக் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் விளக்கம் அளித்தது.
சவுதி அரேபியா:
தமிழகத்தின் சென்னையில் சமீபத்தில் காகங்கள் இறந்து கிடந்தன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடத்திய ஆய்வில் ஒரு காகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பறவைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எடுத்து வருகிறது.
பறவைக் காய்ச்சல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனக்கூறியுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,
மக்கள் பறவைக் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு இந்திய முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் முட்டைகளுக்கு சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், உணவு பாதுகாப்புத் தரங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகார சபையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
உலகளாவிய சுகாதார முன்னேற்றங்களுக்கு ஏற்ப இந்தப் பட்டியல் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, நேபாளம் உள்ளிட்ட 40 நாடுகளின் முட்டைகளுக்கும் சவுதி அரேபியா தடை விதித்துள்ளது..