செய்திகள்

செங்குன்றம் அருகே டாக்டர்கள் சென்ற மொபட் மோதி தொழிலாளி பலி

Published On 2018-05-27 11:28 GMT   |   Update On 2018-05-27 11:28 GMT
செங்குன்றம் அருகே டாக்டர்கள் சென்ற மொபட் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதவரம்:

மாதவரத்தை அடுத்த கொசப்பூரை சேர்ந்தவர் அருள் (52). கூலி தொழிலாளி. இவர் செங்குன்றம் அருகேயுள்ள கண்ணம பாளையத்தில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர் பிரபாகரன் (24), மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் கார்த்திக் செல்வம் (23) ஆகியோர் ஓட்டி வந்த ‘மொபட்’ அவரது சைக்கிள் மீது மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட அருள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பயிற்சி டாக்டர் பிரபாகரன், மாணவர் கார்த்திக் செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் ஆந்திர மாநிலம் தடாவுக்கு சென்ற போது விபத்து நடந்தது தெரிய வந்தது.

Tags:    

Similar News