செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை- பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 6 பேர் இன்று ஆஜர்

Published On 2018-05-26 07:56 GMT   |   Update On 2018-05-26 07:56 GMT
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 6 பேர் இன்று நேரில் ஆஜர் ஆனார்கள். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் அரசு செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சிலரை ஆணையத்துக்கு மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டனர்.


ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்-யார் பார்த்தார்கள். அங்கு யார் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்தது என்பது உள்பட பல்வேறு தகவல்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
Tags:    

Similar News