செய்திகள்

பெருந்துறை அருகே லாரி-வேன் மோதி விபத்து - டிரைவர் பலி

Published On 2018-05-19 14:33 IST   |   Update On 2018-05-19 14:33:00 IST
பெருந்துறை அருகே லாரியின் மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
ஈரோடு:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கத்தில் இருந்து 23 பேர் டிராவல்ஸ் வேனில் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

வேனை பனப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அந்த வேனும் அவருக்கு சொந்தமானதாகும்.

கேரளாவுக்கு போகும் வழியில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் வந்த வேன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை வேன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை நெருங்கியது. பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பினர்.

பின்னர் அங்கிருந்து வேன் கிளம்பியது. அருகில் உள்ள மேம்பாலத்தில் வேன் ஏறியது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் வேன் பயங்கரமாக மோதியது.

இதில் டிரைவர் இருக்கும் பக்கம் வேன் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் இருக்கை மற்றும் அதற்கு பின்னால் உள்ள 2 இருக்கைகள் நொறுங்கியது.

இதில் டிரைவர் சுதாகர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பின்பக்கத்தில் 2 இருக்கையில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். வேனில் இருந்த மற்றவர்களும் காயம் அடைந்தனர்.

மொத்தம் 20 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களில் திருமூர்த்தி, லட்சுமி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

4 பேர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் காயம் அடைந்த மகேந்திரன் (13), கீர்த்தனா (17), பவ்யா (13), போகேஸ் (13), மவுனிகா (20) ஆகிய 5 பேர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காயம் அடைந்த மற்றவர்கள் லேசான காயத்துக்கு சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News