நாகை அருகே பா.ஜனதா பிரமுகரை வழிமறித்து மர்ம கும்பல் தாக்குதல்: போலீஸ் குவிப்பு-பதட்டம்
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் சீர்காழியில் கடந்த 11-ந்தேதி நடந்த பா.ஜனதா ஆர்ப்பாட்த்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசி தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதனை கண்டித்து நேற்று நாகையில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்து எச்.ராஜா உள்பட கட்சியினரை கைது செய்தனர்.
இந்நிலையில் நாகை அருகே பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்தவர் பா.ஜனதா பிரமுகர் செல்வம்(வயது40). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக வீட்டிலிருந்து நாகூருக்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் தாங்கள் வைத்திருந்த இரும்பு குழாயால் செல்வத்தை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து நாகை அரசு மருத்துவமனை மற்றும் புதிய, பழைய பஸ் நிலையங்கள் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பதட்டம் நிலவுகிறது.