செய்திகள்

மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக புகார்: சீர்காழி பா.ஜனதா பிரமுகர் கைது

Published On 2017-12-15 10:40 IST   |   Update On 2017-12-15 10:40:00 IST
மதநல்லிணத்தை சீர்குலைக்கும் வகையிலும் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீர்காழி பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய கருத்தை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் கடந்த 11-ந் தேதி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென பா.ஜனதாவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜனதாவினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம் (வயது 50) பேசினார். அப்போது அவர் மதநல்லிணத்தை சீர்குலைக்கும் வகையிலும் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மன் சீர்காழி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ஜனதா பிரமுகர் அகோரத்தை நள்ளிரவில் திருவெண்காட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பா.ஜனதா - விடுதலை சிறுத்தைகள் மோதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News