மயிலாடுதுறையில் மாணவர் மீது கும்பல் தாக்குதல்: பா.ம.க.வினர் போலீசில் புகார்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பாண்டூர் வடக்கு வெளியை சேர்ந்த சங்கர் மகன் சுந்தர்(வயது20). இவர் தனியார் தொழிற் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று தனது நண்பர்கள் வருகைக்காக காத்திருந்தார்.
அப்போது மயிலாடுதுறை கலைஞர் நகரை சேர்ந்த பிரபா தம்பி, சேந்தங்குடியை சேர்ந்த கவியரசன், கபிலன் உள்பட 14 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சுந்தரிடம் ஜாதி தொடர்பாக பேசி அவரை தாக்கியதுடன் அவரை முட்டி போட வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த பா.ம.க. பிரமுகர் வி.பி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். அப்போது அவர்கள் மாணவரை தாக்கிய கும்பலை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுபற்றி சப்-இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து 14 பேரையும் தேடிவருகிறார். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.