பண்ருட்டியில் மணல் ஏற்றி வந்த லாரி மோதி 2 பேர் பலி
பண்ருட்டி:
புதுவை மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்தவர் ரவி (35) இவர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று அதே கம்பெனியில் வேலை செய்யும் கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் என்பவருடன் பண்ருட்டிக்கு வந்தார்.
பின்னர் மாலை 3.30 மணியளவில் பண்ருட்டி -கும்பகோணம் சாலையின் ஓரத்தில் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி திடீரென்று அவர்கள் மீது மோதியது.
இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மணிகண்டன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணிகண்டன் உயிரிழந்தார். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.