செய்திகள்

வேளாங்கண்ணி அருகே கத்தியால் கையை அறுத்து முதியவர் தற்கொலை

Published On 2017-05-02 19:26 IST   |   Update On 2017-05-02 19:26:00 IST
வேளாங்கண்ணி அருகே கத்தியால் கையை அறுத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பூக்காரத்தெரு அருகே உள்ள கடற்கரையோரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடப்பதாக தெற்கு பொய்கைநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து அவர், வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு சோதனை செய்தனர். இதில் இறந்து கிடந்தவர் கத்தியால் கையில் அறுத்து கொண்ட காயம் இருந்தது. மேலும், அருகே சவரம் செய்யும் கத்தியும், பை ஒன்றும் கிடந்தது. இதையடுத்து பையை எடுத்து பார்த்தபோது அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகைக்கடை தெருவை சேர்ந்த ஜோதிக்குமார் போலார் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஜோதிக்குமார்போலார் சவரம் செய்யும் கத்தியால் கையில் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், ஜோதிக்குமார் போலார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News