செய்திகள்

ஆதார் அட்டைகளில் திருத்தம் செய்யலாம்: கலெக்டர் பழனிசாமி தகவல்

Published On 2017-04-29 17:19 GMT   |   Update On 2017-04-29 17:19 GMT
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்கு சென்று கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் பதிவு செய்தல் கட்டணமில்லை. 5 மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்தல் கட்டணமில்லை.நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்குரூ.25. புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி முதலியன புதுப்பிக்க ரூ.25. ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்ளுவதற்கு ரூ.10. மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொது மக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச்சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளர்களிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News