வேதாரண்யம் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலி
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிகுளம் மேலசேத்தி, வேப்பதேவன் காட்டை சேர்ந்தவர் மகாலிங்கம் என்பவர் மகன் அண்ணாதுரை (வயது 26). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் குட்டைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் குட்டையில் மூழ்கி இறந்து பிணமாக மிதப்பது தெரியவந்தது. அவர் வலிப்பு நோய் காரணமாக குட்டையில் மூழ்கி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வாய்மேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பலியான அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பலியான வாலிபருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். அவர்கள் அண்ணாதுரை உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.