மயிலாடுதுறை பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாப்படுகை நாராயணபுரத்தை சேர்ந்தவர் ரமணி. இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ராதா. இவர் தனது குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ராதா மும்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் வீட்டின் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே சென்றது. அங்கு 2 அறைகளில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து ராதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மயிலாடுதுறை வந்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
ராதாவின் வீடு ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ளது. எனவே கொள்ளையர்கள் தண்டவாளம் வழியாக வந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை அருகே உள்ள கருவாக்கரை மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன். கூலித் தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். இதனை கவனித்த கொள்ளையர்கள் வைத்தியநாதன் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்ப ணத்தை கொள்ளையடித்து செனறு விட்டனர்.
இது குறித்து செம்பனார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்ப்) குலோத்துங்கன் விசாரணை நடத்தி வருகிறார்.