செய்திகள்

செந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

Published On 2017-04-16 20:24 IST   |   Update On 2017-04-16 20:25:00 IST
செந்துறை அருகே சாலையை கடந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி ஸ்ரீரங்கம் (வயது 68). ஆடு மேய்ப்பவர்.
நேற்று வழக்கம் போல் பக்கத்து ஊரான விழுப்பனங்குறிச்சியில் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பினார். விழுப்பனங்குறிச்சி பஸ் நிலையம் அருகில் ரோட்டை கடக்கும் போது  எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில்  சம்பவ இடத்திலேயே ஸ்ரீரங்கம் பலியானார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற போலீசார் ஸ்ரீரங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த சங்கர் (32) மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன், செந்தில் ஆகிய மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில்  குடிப்பதற்கு மது வாங்கி வந்த போது விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சங்கரை போலீசார்  கைது செய்தனர். தப்பி சென்ற  இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News