செய்திகள்

செக் மோசடி வழக்கு: அரியலூர் அ.தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2017-04-05 19:34 IST   |   Update On 2017-04-05 19:34:00 IST
அரியலூர் அருகே செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:

அரியலூர் அருகே கீழப்பழுரை சேர்ந்தவர் சக்திவேல், இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் கீழப்பழுர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான அரிச்சந்திரன் குடும்ப செலவிற்காக சுமார் 4 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், வாங்கியகடனை திருப்பி தருமாறு  சக்திவேல் அரிச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் அரியலூர் ஸ்டேட் வங்கி காசோலையை வழங்கியுள்ளார். பின்னர், சக்திவேல் காசோலையுடன் வங்கிக்கு சென்று, அவரது கணக்கில் போட்ட போது கணக்கில் பணமில்லாததால் செக் திரும்ப வந்துவிட்டது.

இது குறித்து சக்திவேல் 2015ம் ஆண்டு அரியலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி  செக் மோசடி செய்ததாக அரிச்சந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 மாதத்திற்குள் சக்திவேலிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பு அளித்தார்.

அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News