செய்திகள்

தம்பியை கொன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அரியலூர் நீதி மன்றம் தீர்ப்பு

Published On 2017-02-17 22:13 IST   |   Update On 2017-02-17 22:13:00 IST
தம்பியை கொன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இளமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியின் மகன் பிரபாகரன் (வயது26). இவர் கடந்த 11.7.2016 அன்று தனது நண்பர்களுடன் அப்பகுதியிலுள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அவருடன் செல்வராஜின் 2-வது மனைவியின் மகனான ராஜேஷ்குமாரும் (18) விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது தம்பியான ராஜேஷ்குமாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராஜேஷ்குமாரின் தாய் செல்லப்பாங்கி அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் பிரபாகரனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News