செய்திகள்

ஈரோட்டில் பா.ஜனதா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2016-09-29 17:09 IST   |   Update On 2016-09-29 17:09:00 IST
ஈரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஈரோடு:

கோவையில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்ம ஆசாமிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மற்றும் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் பஸ் மீது கல்வீச்சு, கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதீய ஜனதா பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு, பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவங்களையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அலுவலகங்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த கட்சி அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் ஈரோடு நசியனூர் ரோட்டில் உள்ள இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் பூசப்பன், ஈரோடு சூரம்பட்டியில் உள்ள இந்து முன்னணி மாநில பொருளாளர் சண்முக சுந்தரம், ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மற்றும் இந்து முன்னணி பிரமுகர் ராம்பிரபு ஆகியோரது வீடுகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Similar News