உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே சீல் வைக்கப்பட்ட ஆசிரமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

Published On 2023-06-09 07:16 GMT   |   Update On 2023-06-09 07:16 GMT
  • விக்கிரவாண்டி அருகே சீல் வைக்கப்பட்ட ஆசிரமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மினி லாரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எடுத்து செல்லப்பட்டது.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு தங்கியிருந்த மனநலம் குன்றியவர்களை துன்புறுத்தியது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போன்ற புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் ஆசிரமத்தின் பின்பக்க கேட் வழியாக மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர். ஆசிரமத்தின் அருகில் இருந்தவர்கள் இது குறித்து ஆசிரம நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து ஆசிரம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கஞ்சனூர் இன்ஸ்பெ க்டர் சேகர், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சூரப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். மினி லாரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எடுத்து செல்லப்பட்டது. இது அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து திருடப்பட்டது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளையும், அதனை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளை திருடிய குண்டலப்புலியூரை அடுத்த பூங்குணம் தர்மலிங்கம் மகன் ராமன் (வயது 28), உலகலாம்பூண்டி ராமலிங்கம் மகன் முத்து (36) ஆகியோரை கைது செய்தனர். இது தவிர வேறு எங்கேனும் இவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News