2 குழந்தைகள் கடத்தல்: 3 மணி நேரத்தில் திருக்கழுக்குன்றத்தில் மீட்பு- வாலிபர் கைது
- தூங்கிய குழந்தைகள் சித்ரா, சந்தோஷ் மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
- இம்ரான் கடத்தப்பட்ட 2 குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் இருப்பது தெரியவந்தது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு, ராட்டின கிணறு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் தெருவோ ரத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி அமுதா. இவர்களது 3 வயது மகள் சித்ரா, 1½ வயது மகன் சந்தோஷ். கணவன்-மனைவி இருவரும் சாலையோரத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் வழக்கம்போல் மேம்பாலத்தின் கீழ் தூங்கினர். நள்ளிரவு எழுந்து பார்த்தபோது அருகில் தூங்கிய குழந்தைகள் சித்ரா, சந்தோஷ் மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு 1.30 மணியளவில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் தெருவோரத்தில் தங்கி இருக்கும் இம்ரான் என்ற மீரான் என்பவரும் மாயமாகி இருந்தார். அவர் குழந்தைகளை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இம்ரான் கடத்தப்பட்ட 2 குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத் தாொடர்ந்து போலீசார் விரைந்து சென்று குழந்தைகள் 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் இம்ரானை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை கடத்தப்பட்டதாக புகார் வந்த 3 மணிநேரத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குழந்தைகளை மீட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.