உள்ளூர் செய்திகள்

பெருமாள் நவநீத சேவை நடந்தது.

15 பெருமாள்கள் நவநீத சேவை

Published On 2022-06-20 15:37 IST   |   Update On 2022-06-20 15:37:00 IST
  • விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது.
  • இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது. நேற்று 24 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது.

விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது. இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்பட 15 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

பின்னர் அங்கிருந்து 15 பெருமாள்களும் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா முடிந்ததும் அந்தந்த கோவில்களுக்கு பெருமாள்கள் சென்றடைந்தன.

விழாவில் நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

Tags:    

Similar News