பொது மருத்துவம்

சைனஸ் என்றால் என்ன...? அதன் அறிகுறிகள்

Published On 2024-04-18 06:31 GMT   |   Update On 2024-04-18 06:31 GMT
  • சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு.
  • மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.

சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.

உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.

மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.

மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.

நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய்.

காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக் காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது.

முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.

அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில்

இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சினையாகும்.

இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவைசிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது.

மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம்.

மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும்.

ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சினைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.

Tags:    

Similar News