பெண்கள் உலகம்

குழந்தைகளை விளையாட விடுங்க

Published On 2018-11-09 13:33 IST   |   Update On 2018-11-09 13:33:00 IST
குழந்தைகளை விளையாட விடாததால் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
வெளியே விளையாடினால் ஏதேனும் பாதிப்பு வந்துவிடும் என்று வீட்டிலேயே பொத்திபொத்தி பாதுகாக்கின்றனர். இதனால், குழந்தைகளின் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

உடல் உழைப்பு இன்மை, ஜங்க் புஃட் காரணமாக நகர்ப்புற குழந்தைகளில் நான்கில் ஒருவர் உடல்பருமனாக உள்ளனர். அதுவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், 26 சதவிகிதம் பேரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில், 4.5 சதவிகிதம் பேரும் உடல்பருமனாக உள்ளனர். ஓடியாடி விளையாடும்போது தேவையற்ற கலோரி, கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் ஃபிட்டாக இருப்பர்.

விளையாடும்போது மற்ற குழந்தைகளுடன் பழக்கம் ஏற்படுகிறது. இது, கூட்டுறவு மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படும் திறனை வளர்க்க உதவுகிறது. இது, குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கவும், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை, முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் உதவுகிறது. குழுவாக விளையாடும்போது பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு ஏற்படுகிறது. வீட்டிலேயே அடைந்துகிடக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திறன் மிகக் குறைவாகவே இருக்கிறது.

‘குழந்தைகள் விளையாடும்போதுதான் அவர்கள் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கிறது’ என்கிறது ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ ஆய்வு. குழுவாக விளையாடும்போது, குறிப்பிட்ட விஷயத்தில் கவனத்தைச் செலுத்தும் திறன், சமாளிக்கும் திறன், இதற்காக கை, கால், கண்கள் என ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து செயல்படும் திறன் மேம்படுகிறது.

“பள்ளிகளில் விளையாட்டு நேரம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. குறைந்தது 15 நிமிடங்களாவது குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போதுதான் அவர்களது கல்வி கற்கும் திறன் மேம்படும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

Tags:    

Similar News