வழிபாடு

திருச்செந்தூரில் இன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா

Published On 2024-02-20 06:26 GMT   |   Update On 2024-02-20 06:26 GMT
  • மாசித்திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
  • சண்முகர் இன்று சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.

7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 4.30 மணிக்கு உருகு சட்டசேவை, காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

8-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான (23-ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான (24-ந்தேதி) தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

Tags:    

Similar News