மகா சிவராத்திரியையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது.
மகா சிவராத்திரியையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.

கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராடிவிட்டு கடற்கரை மண்ணில் சிவலிங்கம் போன்று வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர்.

பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள சாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வட மாநில பக்தர்கள் காசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை அபிஷேகத்திற்கு வழங்குவதற்காக தலையில் சுமந்து கொண்டு வந்தனர். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.

சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com