வழிபாடு

பித்ரு பூஜைக்கு புகழ்பெற்ற திருநாவாய் கோவில்

Published On 2026-02-15 15:41 IST   |   Update On 2026-02-15 15:41:00 IST
  • மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர்.
  • அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது, திருநாவாய் நவ முகுந்தன் கோவில். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் திருமாலை நினைத்து 9 யோகிகள் தவம் செய்துள்ளனர். இதனால் இத்தலம் 'நவ யோகித்தலம்" என்று அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி 'நாவாய் தலம்' என்றாகி, தற்போது 'திருநாவாய்' எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் காடு வழியாக ஒன்பது முனிவர்கள் பயணித்தனர். செல்லும் வழியில் ஒரு இடம் பிடித்துப்போக, அந்த இடத்தில் விஷ்ணுவை வேண்டி தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில், ஒருவர் பின் ஒருவராக எட்டு முனிவர்கள் முக்தியடைந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தம் அடைந்தார். அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு, அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்முனிவர், "இறைவா, என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்கள் உருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன. அவர்களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது" என்றார். இறைவன் அவருடைய கவலையைப் போக்க, எட்டு முனிவர்களையும் காட்டியருளினார். அந்த முனிவர்கள், "இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்றுவிட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருக்கிறோம்" என்றனர். அதைக்கேட்ட முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமல் இருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.

இறைவன் "முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்கு தெரியாமலே போய்விடும். பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்" என்றார். பின்பு, இறைவன் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே இங்கு கோவில் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. கஜேந்திரன், இதை பெருமாளிடம் கூறி வருந்தியது. உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து, "இனிமேல் பூப்பறிக்க வேண்டாம், கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு" என்றார். லட்சுமியும் ஒப்புக்கொண்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன், தினமும் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தது. பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவிலில் பெருமாள், 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார். மிகப்பழமையான இக்கோவிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் உள்ளன. கோவில் சுற்றுப்பகுதியில் கணபதி, திருமகள், ஐயப்பன் ஆகியோர் சன்னிதிகளும் காணப்படுகின்றன.

துவாபர யுகத்தில் கிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவுகடந்த புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் அருள்பாலிப்பதால், இங்கே நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.

அமைவிடம்

கேரளாவின் திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. திரூரில் இருந்து கோவிலுக்கு பேருந்தில் செல்லலாம்.

Tags:    

Similar News