வழிபாடு

தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்

Published On 2022-08-29 09:32 GMT   |   Update On 2022-08-29 09:32 GMT
  • இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • நாளை அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.

11-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பச்சை பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்டசாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட பணிவிடைகளை குரு பால ஜனாதிபதி நிகழ்த்தினார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் பள்ளி அலங்கார பணிவிடைகளை செய்திருந்தனர்.

பள்ளியறை பணி விடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவை குந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் 'அய்யா சிவசிவா அரகரா' என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தடையும். வடக்கு வாசலில் அய்யா வழி பக்தர்கள் பூ, பழம், பன்னீர், தேங்காய், போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வருகிறது.

இரவு 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உட்பட பல மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜன், பால்மணி, ராஜலட்சுமி, சத்தியசேகர், ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News