வழிபாடு

நவநீத கிருஷ்ணர் கோவிலில் ஸ்ரீஜெயந்தி உற்சவ விழா நிறைவு

Published On 2023-09-17 11:00 IST   |   Update On 2023-09-17 11:00:00 IST
  • உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உள்ளது.
  • இறுதி நாளான நேற்று பரமபதநாதன் தெப்ப உற்சவம், ரங்கமன்னார் ஆண்டாள் சேர்த்தி சேவை.

உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஸ்ரீஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரையில் 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

அதன்படி கண்ணன் பிறந்த நிகழ்வு, தவழும் கண்ணன், காளிங்க நர்த்தன கண்ணன், பாற்கடல் பள்ளிகொண்ட திருவரங்கன் தெப்ப உற்சவம், வெண்ணை தாழி கண்ணன், ராஜகோபாலன், உறியடி உற்சவம், விஸ்வரூபம், கோவர்த்தனை கிரிதாரி தெப்ப உற்சவம் என 9 நாட்களாக நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று பரமபதநாதன் தெப்ப உற்சவம், ரங்கமன்னார் ஆண்டாள் சேர்த்தி சேவை, வாரணமாயிரம், பாசுரங்கள் சேவை, ராமானுஜ நூற்றாந்தாதி சேவை, சாற்றுமறை தீர்த்தப்பிரசாதம் கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், குமுதவல்லி நாச்சியார், ராமானுஜர், சர்ப்ப கிரகத்தில் எழுந்தருளிய மணவாள மாமுனிவர் உள்ளிட்டோருக்கும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடி பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி, ஆழ்வார்களை சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News