சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கபிலேஸ்வரர், காமாட்சி வீதிஉலா
- ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
- இன்று பூத வாகன வீதிஉலா, சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை உற்சவர் கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சூரியபிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் பஜனைகள், கோலாட்டங்கள் நடந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்திக்கும், காமாட்சி தாயாருக்கும் காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறு ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு சந்திர பிரபைவாகன வீதிஉலா நடந்தது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.