கிரிக்கெட்
null

இந்தியா தோற்றால் வீரர்களை குறை கூறுங்கள்..ஏன் ஐபிஎல் மீது பழிபோடுகிறீர்கள்.. கம்பீர் ஆவேசம்

Published On 2022-11-27 03:15 GMT   |   Update On 2022-11-27 03:22 GMT
  • ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை குறை கூறுங்கள்.
  • இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல்.

டெல்லி:

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.

ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.

ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News