முதல் ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
- இலங்கை அணியில் நிலாஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார்.
- இந்திய அணி தரப்பில் தீப்தி வர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன் படி இலங்கை அணி வீராங்கனை களமிறங்கினார். கேப்டன் சமாரி அதபத்து 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹன்சிமா கருரத்ணே 0 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஹசினி பேரேரா-மாதவி ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை தீப்தி வர்மா பிரித்தார். இலங்கை அணி 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசினி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற சிறிது நேரத்தில் கவிஷா தில்ஹாரி கவூர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அடுத்ததாக நிலாக்ஷி டி சில்வா பொறுப்புடன் விளையாடினார். ஒரு முனையில் இவர் நிலைத்து ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. மாதவி 28, அனுஷ்கா சஞ்சீவனி 18, ஓஷதி ரணசிங்கே 8, ராஷ்மி 7, ரணவீரா 12 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் தீப்தி வர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது.