கிரிக்கெட்

சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி தெரிவித்த சுனில் நரைன்

Published On 2024-05-27 09:19 GMT   |   Update On 2024-05-27 09:19 GMT
  • சுனில் நரைன் இந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 488 ரன்கள் விளாசினார்.
  • 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐபிஎல் 2024 சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். பேட்டிங்கில் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சாளரான சுனில் நரைன் இந்த தொடரில் பேட்டிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

15 போட்டிகளில் 14 இன்னிங்சில் பேட்டிங் செய்து மொத்தம் 488 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 109 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் பந்து வீச்சில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இறுதி போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் வெளியில் இருந்து வந்த இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சுனில் நரைன் சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுனில் நரைன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக கொல்கத்தா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு நன்றி.

அதேபோல் நேற்றிரவு ஆதரவை வெளிப்படுத்திய சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News