கிரிக்கெட்

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

பாகிஸ்தானின் ஷகீன் ஷா அப்ரிடியை விட 20 ஓவர் உலக கோப்பையில் பும்ரா சிறப்பாக செயல்படுவார்- ரிக்கி பாண்டிங் சொல்கிறார்

Published On 2022-09-23 07:37 GMT   |   Update On 2022-09-23 12:24 GMT
  • ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாக விளையாடியிருக்கிறார்
  • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

மெல்போர்ன்:

20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு நாடும் தங்களது அணியை அறிவித்து விட்டன. இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திரும்பி உள்ளார்.

அதே போல் காயத்தில் இருந்து குணம் அடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியின்போது, உலக கோப்பையில் பும்ரா, ஷகீன் ஷா அப்ரிடி இருவரில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்து கூறும் போது, ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார் என்று கருதுகிறேன். இதில் அனுபவத்தை வைத்து நான் பதில் கூறுகிறேன். பும்ரா ஆஸ்திரேலியாவில் ஓரளவு கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாகவும், பெரிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதனால் உலக கோப்பையில் அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

20 ஓவர் போட்டியில் பும்ரா 58 போட்டியில் 69 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 40 போட்டியில் 47 விக்கெட்டும் எடுத்து உள்ளனர்.

இதற்கிடையே இன்று நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டியில் பும்ரா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறும்போது, போட்டிக்கு பும்ரா தயாராக இருக்கிறார் என்றார்.

Tags:    

Similar News