நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா - பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி
- நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
- இந்திய அணியின் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இந்தியா, விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 48 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது ஒரு அற்புதமான குழு முயற்சியாகும். அங்கு அனைவரும் பங்களித்தனர். களத்தில் வீரர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.