விராட் கோலியை கேப்டனாக்க கூடாது - மிஸ்பா உல் ஹக் சொல்லும் காரணம் இதுதான்
- மிஸ்பா உல் ஹக் தற்போது பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.
- ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இல்லாத நிலையில் கோலி இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருப்பார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பும்ரா கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். ரோகித் இல்லாதபட்சத்தில் விராட் கோலியை கேப்டனாக நியமிக்கலாம் என கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க கூடாது என கூறியுள்ளார்.
இது குறித்து மிஸ்பா உல் ஹக் கூறியதாவது:-
விராட் கோலிக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது அவரது பேட்டிங்தான். இதனால் சமீபகாலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்திய அணிக்கு அவர் ஒரு பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பதால் அவரை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கும் முன் அணி நிர்வாகம் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இல்லாத நிலையில் கோலி இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோகித் சர்மாவை பிசிசிஐ மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து வருவதாகவும், போட்டிக்கு தகுதியற்றவர் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
மிஸ்பா உல் ஹக் தற்போது பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.