கிரிக்கெட்

ஆர்சிபி அணியை விட்டு விராட் கோலி வெளியேற வேண்டும்- பீட்டர்சன் அறிவுரை

Published On 2024-05-23 15:57 GMT   |   Update On 2024-05-23 15:57 GMT
  • உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
  • எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

அகமதாபாத்:

இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

அதனால் 2008 முதல் தொடர்ந்து 17-வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு பரிதாபமாக வெளியேறியது. அதே காரணத்தால் விராட் கோலியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்காக மொத்தம் 8000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்த வருடம் 741 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இருப்பினும் வழக்கம் போல முக்கிய போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்ட விராட் கோலி சோகத்துடன் வெளியேறினார்.

இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் மெஸ்சி, ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள்போல ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி விராட் கோலி வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஏற்கனவே சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். மற்ற விளையாட்டுகளின் மகத்தானவர்கள் சில அணிகளை விட்டு வெளியேறி மற்ற அணிகளில் சேர்ந்து வெற்றிகளை கண்டுள்ளனர். அதேபோல கடுமையாக முயற்சித்த விராட் கோலி மீண்டும் ஆரஞ்சு தொப்பியை வென்றும் அவருடைய அணி தோல்வியை சந்தித்தது.

ஆர்சிபி அணிக்கு அவர் மதிப்பை கொண்டு வருகிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் விராட் கோலி கோப்பைக்கு தகுதியானவர்.

எனவே கோப்பையை வெல்ல பெற உதவும் அணிக்காக அவர் விளையாடத் தகுதியானவர். உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

ரொனால்டோ, மெஸ்ஸி, ஹரி கேன் ஆகியோர் தங்களுடைய அணிகளை விட்டுச் சென்று வேறு அணியில் விளையாடி வெற்றி கண்டனர்.

இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

Tags:    

Similar News