கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: 2 கோடிக்கு ஏலம் போன இந்திய, ஆஸ்திரேலிய வீராங்கனைகள்

Published On 2023-12-09 12:18 GMT   |   Update On 2023-12-09 12:18 GMT
  • மகளிர் பிரீமியர் லீக் ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.
  • இதில் இந்திய, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ரூ.2 கோடிக்கு ஏலம் போயினர்.

மும்பை:

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

முதல் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.

இதற்கிடையே, 2-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.

ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள்.

5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும்.

இந்நிலையில், இந்திய வீராங்கனை காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

இதேபோல், ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

மற்றொரு இந்திய வீராங்கனை விருந்தா தினேஷை உ.பி. வாரியர்ஸ் அணி 1.3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

Tags:    

Similar News