ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: 2வது நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் 527 ரன்கள் குவிப்பு
- ஜம்மு காஷ்மீரின் ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- அந்த அணியின் மேலும் 5 வீரர்கள் அரை சதம் கடந்து அசத்தினர்.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. ஷுபம் பண்டிர் சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பரஸ் டோக்ரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்துல் சமது 61 ரன்னில் வெளியேறினார். கண்ணையா வாத்வான் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 527 ரன்கள் குவித்துள்ளது. ஷகில் லோத்ரா 57 ரன்னும், அபித் முஷ்டாக் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் வீழ்த்தினார்.