கிரிக்கெட் (Cricket)

ஒரே சதம்- இந்திய ஜாம்பவான்கள் சாதனை பட்டியலில் இடம் பிடித்த ஜெய்ஸ்வால்

Published On 2024-02-02 20:39 IST   |   Update On 2024-02-02 20:39:00 IST
  • இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது.
  • ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 257 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 179 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் இருக்கும் சுனில் கவாஸ்கரின் (179) சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். முதல் இடத்தில் கருண் நாயர் உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ஒரே நாளில் 232 ரன்கள் குவித்திருந்தார். 3-வது இடத்தில் முகமது அசாருதீன் (175) உள்ளார்.

இந்திய மண்ணில் ஜெய்ஸ்வால் முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் இளம் வயதில் சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் (22 ஆண்டுகள் 36 நாட்கள்) படைத்துள்ளார். இவருக்கு முன்னர் சச்சின் (19 ஆண்டுகள் 293 நாட்கள்) மற்றும் வினோத் காம்ளி (21 ஆண்டுகள் 32 நாட்கள்) உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக 150+ ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 3 இடங்கள் முறையே கம்பீர் (179 ரன்கள் மொகாலி 2008), கேஎல் ராகுல் (199 ரன்கள் சென்னை), ரோகித் சர்மா (161 ரன்கள் சென்னை).

Tags:    

Similar News