கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையில் பும்ரா ஆட வாய்ப்பு: 2 அல்லது 3 நாளில் இறுதி முடிவு- கங்குலி

Published On 2022-10-01 05:10 GMT   |   Update On 2022-10-01 05:10 GMT
  • 20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை.
  • உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது.

புதுடெல்லி:

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகி இருந்தார்.

முதுகுவலி காயம் காரணமாக அவரால் உலகக்கோப்பையில் ஆட இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பும்ரா விலகியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரர்களில் ஒருவர் இடம் பெறுவார் என்று கருதப்படுகிறது. இதற்காக முகமது ஷமி, தீபக் சாஹர் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை. அவர் இன்னும் நீடிக்கிறார். பும்ராவின் நிலை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட் களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்கள். 13-ந்தேதி வரை இந்திய அணி பெர்த் நகரில் இருக்கும்.

உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது. அதற்கு முன்பு 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. அக்டோபர் 17-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ந்தேதி நியூசிலாந்துடனும் இந்தியா விளையாடுகிறது.

Tags:    

Similar News