தேர்தலுக்கு பின் வெளியாகும் ஜன நாயகன்? ஓ.டி.டி. உரிமத்தை ரத்து செய்த நிறுவனம்
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக இருந்தது.
- மறுதணிக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், அரசியலுக்கு வந்தப்பின் அவர் திரையுலகில் நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே. வி. என் புரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜன.9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. மார்ச் 9 அன்று நடக்கவிருந்த மறுதணிக்கையும் (Re-censor), அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னரே படம் வெளியாகும் என கூறப்பட்டு வருவதால், ரூ.120 கோடிக்கு வாங்கிய ஓ.டி.டி. உரிமத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.