சினிமா
பூஜையுடன் துவங்கிய விஜய் சேதுபதியின் அடுத்த படம்
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து அருண் குமார், விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #VijaySethupathi #Anjali
`ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', `செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதில் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி அருகே இலஞ்சியில் பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. இறைவி படத்தை தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
`பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - அருண்குமார் இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே புரொடக்ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
மலேசியா மற்றும் தென் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #VijaySethupathi #Anjali