ஆன்மிக களஞ்சியம்

ஆண்களே தயாரிக்கும் கொழுக்கட்டை

Published On 2023-09-26 12:30 GMT   |   Update On 2023-09-26 12:30 GMT
  • ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
  • இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

திருநெல்வேலி மாவட்ட தென்கோடியில் தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பூ அய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.

இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை.

விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர்.

ஒரு கோட்டை நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும்.

இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும் இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்குவார்கள்.

மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள்.

இதை காட்டுக் கொடி நிரவி, அதன் மீது இலைகளை பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள்.

அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்து பூரணத்தையும் வைப்பர்.

இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையை பரப்பி மூடி,

காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள்.

மெகா கொழுக்கட்டை உருவாகி விட்டது.

இதற்கு முன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள்.

ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.

சாமி ஆடியப்படியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார்.

யாராலும் நெருங்க முடியாத தணலில் அங்கிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்து விடுவார்.

இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

ஆயிரக்கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார்கள்.

பின் மறுநாள் கொழுக்கடையை பிரித்து ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.

Tags:    

Similar News