search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதா நிலையம்"

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசு வக்கீலுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் இல்லம் உள்ளது.

    இந்த இல்லத்தை நினைவு இடமாக மாற்ற கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    சட்டபடியான வாரிசுதாரர்களான எங்களிடம் கருத்துகேட்காமல் அரசு முடிவு எடுத்து உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சே‌ஷசாயி அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவிற்கு ஏற்கனவே மெரினா கடற்கரையில் நினைவிடம் இருக்கும் போது மற்றொரு நினைவகத்தை மக்களின் வரிபணத்தில் உருவாக்குவதை ஏற்கமுடியாது.

    தீபக்-தீபா

    இந்த வேதா நிலையத்தின் சாவி சென்னை மாவட்ட கலெக்டரிடம் உள்ளது. அந்த சாவியை மூன்று வாரத்திற்குள் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சென்னை ஜகோர்ட்டு தீர்ப்பின் நகலை இணைத்து சென்னை மாவட்ட கலெக்டரிடம் தீபா மற்றும் தீபக் ஆகியோர் இன்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்ல சாவியை அரசு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசு வக்கீலுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.


    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
    சென்னை :

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இந்த சாதகமான தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

    கேள்வி:- இந்த வழக்கு நடைபெற்றபோது ஏதேனும் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டதா?

    பதில்:- இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அ.தி.மு.க. கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.

    கேள்வி:- வேதா இல்லத்தின் சாவி எப்போது உங்கள் கையில் கிடைக்க போகிறது?

    பதில்:- தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதை நாங்கள் செய்யவேண்டும்.

    வேதா இல்லம்

    கேள்வி:- வேதா இல்லம் அ.தி.மு.க.வின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

    பதில்:- இது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.

    கேள்வி:- இந்த தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

    பதில்:- அப்படி ஏதாவது நடந்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்.

    கேள்வி:- வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?

    பதில்:- அப்படி எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

    கேள்வி:- எப்போது வேதா நிலையம் செல்ல இருக்கிறீர்கள்?

    பதில்:- நாங்கள் சட்ட விதிகளை முழுமையாக படித்து, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    மேற்கண்டவாறு ஜெ.தீபா பதில் அளித்தார்.

    வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வேதா நிலையம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. வேதா நிலையத்துக்கு இழப்பீடாக செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு வேதா நிலையம், பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடம் எதற்கு? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

    அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். 

    அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை. வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

    மேலும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வேதா இல்லம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தில் வசித்து வந்தார்.

    அவரது மறைவைத் தொடர்ந்து வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

    இதை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றி பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதற்காக வேதா நிலையம் இல்லத்தை விலைக்கு வாங்கி கையகப்படுத்தவும், நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இதே போல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் வேதா நிலையத்தில் தனக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை கேட்காமல் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனால் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

    மேலும் போயஸ் கார்டன் குடியிருப்பு வாசிகளும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தனியார் அமைப்பான சென்னை சமூக பணி கல்லூரியிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த ஈனாக் தலைமையிலான குழுவினர் தேனாம்பேட்டை சமூக நல கூடத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் போயஸ் கார்டனைச் சுற்றிலும் 5 கி.மீ. பரப்பளவில் வசிக்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை, கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி மொத்தம் 120 குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் 108 குடியிருப்பு வாசிகள் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இது தொடர்பாக ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கார்த்திகா, அருணாசலம் உள்பட 108 பேர் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மறைந்த ஜெயலலிதா எங்கள் பகுதியில் வசித்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது. அவர் வசித்த போது பெரிய தலைவர்கள் பலர் இங்கு வந்து சென்றனர். அப்போது இந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

    தற்போது நினைவு இல்லமாக மாற்றினால் அதற்கான போக்குவரத்து வசதிகளோ, வாகன நிறுத்தும் இடங்களோ அங்கு இல்லை. எல்லாமே சிறிய சந்துகளாகவும், சிறிய சாலைகளாகவும் உள்ளது. ஏராளமானவர்கள் வரும் போது வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சிரமம் ஏற்படும். போக்குவரத்து நெரிசல் உருவாகும். திடீர் கடைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

    டெல்லி போன்ற இடங்களில் தலைவர்களின் நினைவு இல்லங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பொது இடத்தில் அமைந்துள்ளன. அதுபோல் ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொது இடத்தில் அமைக்கலாம்.

    ஜெயலலிதா மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதையும், பெருமையும் இருந்தாலும், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் போது எங்களின் தனிப்பட்ட சுதந்திரமும், இந்தப் பகுதியின் அமைதியும் பாதிக்கப்படும்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    அதே சமயம் இந்தப் பகுதி முன்னாள் கவுன்சிலர் சிவராஜ், பிரிதிவிராஜன் உள்ளிட்டோர் நினைவு இல்லமாக மாற்ற ஆதரவு தெரிவித்தனர். தலைவர்கள் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றுவதுதான் சரி.

    அதை இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

    மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நாளை மறுநாள் (10-ந்தேதி) வேறொரு பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கருத்து கேட்பு கூட்டம் முடிந்ததும் இதுபற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
    ×