search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டமலைக்கரை ஓடை"

    • 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது.
    • கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.

    குண்டடம் :

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது :- குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வடசின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கம் 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 268.04 மில்லியன் கன அடியாகும்.

    வட்டமலைக்கரை ஓடையானது அமராவதி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இந்தஓடை பல்லடம் பொள்ளாச்சி சாலையில், அனுப்பட்டி கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.

    இத்தடுப்பணையானது 50 மீட்டர் நீளத்திலும், 1.5 மீட்டர் உயரத்திலும், சுமார் ஒரு நிரப்புக்கு 0.50 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் 3 நிரப்புகளுக்கு 1.50 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை கட்டப்படுவதால் மேற்படி சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 704 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனம் பெறும். மேலும் இத்தடுப்பணையின் 1 கி.மீ சுற்றளவில் உள்ள 56 கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இதனால் விவசாய உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.  

    • வட்டமலைக்கரை ஓடை வழியாக தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • பாம்புகள் சூழலுக்கு ஏற்ப இடம் மாறுவது நடக்கும்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை ஓடை தடுப்பணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக அணைக்கு நீர்வரத்து இன்றி வறண்டு கிடந்தது. மேலும் தண்ணீர் தேக்கி பாசனத்துக்கு திறக்கப்படாததால் பொதுப்பணித் துறையும் இவ்வணை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் அணையின் நீர்தேங்கும் பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து நின்றன.

    முட்புதர்கள் ஆண்டு கணக்கில் இருந்ததால் மான்கள், முயல்கள், கீரிகள், குள்ளநரிகள் மற்றும் ஏராளமான மயில்களின் வசிப்பிடமாக மாறிப்போனது. சீமை கருவேல மரங்கள் இல்லாத பகுதிகளில் வளரும் புற்களை அருகில் உள்ள விவசாயிகள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்தனர். கால் நூற்றாண்டாக நீரின்றி காய்ந்து கிடக்கும் அணைக்கு பிஏபி. பிரதான வாய்க்காலில் உள்ள கள்ளிபாளையம் மதகில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் பொது மக்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு கட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு நவம்பரில் கள்ளிபாளையம் மதகில் இருந்து வட்டமலைக்கரை ஓடை வழியாக தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து அணை ஒரு வாரத்தில் அதன் முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடிக்கு நிரம்பியது. 25 ஆண்டுகள் கடந்து அணை நிரம்பியதால் விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து 4 மாதங்கள் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நின்றதால் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

    அதோடு ஏற்கனவே வறண்டு கிடந்த அணைப் பகுதியில் வசித்து வந்த மான், முயல், காடை, கௌதாரி, கீரி உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கையிலும், பறவையினங்களிலும் மாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழலில் நல்ல பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை ஆவணப்படுத்தி வரும் உத்தமபாளையத்தை சேர்ந்த லோகநாதன் எனும் புகைப்படக்காரர், அணை வறண்டு கிடந்தது முதல் தற்போது அணையில் கடந்த 8 மாதங்களாக தண்ணீர் தேங்கிய பின் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை பதிவு செய்துள்ளார்.

    அதன்படி தற்போது மூன்று முறை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட பின் அணையில் சுமார் 2 அடிக்கு தண்ணீர் உள்ளது. தற்போது அணையில் மான்கள் ,முயல்கள் ,கீரிகள், பறவைகள் எண்ணிக்கையும், பாம்புகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. தண்ணீர் தேங்கியதால் வட்டமலைக்கரை அணையில் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் பற்றி அவர் எடுத்த படங்களில், சுமார் 8 அடிக்கு மேலாக நீளமுள்ள இரு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, பின்னிப் பிணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாடியதை பதிவு செய்துள்ளார்.

    25 ஆண்டுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த அணைப்பகுதியில் இந்த 8 மாதங்களாக தண்ணீர் தேங்கியதால் 78 வகை பறவைகள் இருப்பதும், இதன் மூலம் சுற்றுச்சூழலிலும், உயிரினங்களின் எண்ணிக்கையிலும் ஏற்பட்ட நல்ல பல மாற்றத்தை எடுத்துக் கூறுவதாக இப்படங்கள் அமைந்துள்ளன. சாரைப் பாம்புகளின் இந்த செயல் பற்றி திருப்பூர் இயற்கை கழகத்தின் ரவீந்திரன் கூறுகையில், இயற்கை அதன் பருவங்களுக்கு ஏற்ப சமநிலையில் இருக்கும்போது உயிரினங்கள் பல்கி பெருகுவது நடைபெறும்.

    இதில் பாம்புகள் சூழலுக்கு ஏற்ப இடம் மாறுவது நடக்கும். பாம்புகள் பொதுவாக இணை சேரும்போது இப்படி பின்னிப்பிணைந்து நடனமாடுவது போல் செயல்படும். அதே நேரத்தில் எல்லைப் பிரச்சனை வரும் போதும் இப்படி நடைபெறும். இதில் எது என்பதை கண்டுபிடிப்பது சிரமம் என்றார். எது எப்படியோ இரு சாரைப் பாம்புகள் புகைப்படத்தில் சிக்கியிருப்பது வட்டமலைக்கரை அணைப்பகுதியில் சுற்றுச்சூழல் மேம்பட்டு வருவதை காட்டுவதாக உள்ளது.

    ×