search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் துறவி"

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாத்வி நிரஞ்சன் ஜோதி இணை மந்திரியாக பதவியேற்று இருக்கிறார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் இணை மந்திரியாக பதவியேற்று இருப்பவர் சாத்வி நிரஞ்சன் ஜோதி (வயது 52). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.



    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்த இவருக்கு மோடியின் முந்தைய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணை மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய மந்திரி சபையிலும் தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

    காவி உடை அணிந்து பெண் துறவியாக வலம் வரும் சாத்வி நிரஞ்சன் ஜோதி காடு வளர்த்தல், சமூக-கலாசார மதிப்பீடுகளை பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, ஏழை குழந்தைகள் மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு திருமண உதவி செய்தல் போன்ற நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

    இது ஒருபுறம் இருக்க, மதரீதியான கருத்துகளை கூறி சர்ச்சைகளிலும் இவர் சிக்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் இவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    செஞ்சி அருகே ஜீவசமாதி அடைய பெண் துறவி இன்று 4-வது நாளாக சாப்பிடாமல் விரதமிருக்கிறார். அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாதாஜியிடம் ஆசி பெற்றும் வணங்கியும் செல்கின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேல் சித்தாமூர். இங்கு தமிழக ஜெயினர்களின் தலைமை பீடமான ஜினகஞ்சி ஜெயின் மடமும், ஆயிரம் ஆண்டு பழமையான மல்லிநாதர், பார்சுவநாதர் ஜெயின் கோவில்களும் உள்ளன.

    வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு யாத்திரை வரும் ஜெயின் துறவிகள் இங்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2 ஜெயின் துறவிகள் தலைமையில் 9 பெண் துறவிகள் தமிழகம் வந்தனர்.

    இவர்களில் ஹவாரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண் துறவி சுப்ரமத் பிரபாவதி மாதாஜி பொன்னூர்மலை, வாழப்பந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெயின் கோவில்களுக்கு சென்று தரிசித்தார்.

    பின்னர் அவர் ஜெயின்மத கோட்பாட்டின்படி உண்ணா நோன்பு இருந்து ஜீவசமாதி அடைய முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து சுப்ரமத் பிரபாவதி மாதாஜி கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பெண் துறவிகளுடன் மேல் சித்தா மூர் மடத்துக்கு வந்தார். அன்று முதல் அவர் 1 வேளை உணவு மட்டும் சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முதல் உணவு மற்றும் தண்ணீர் இன்றி விரதம் இருந்து வருகிறார். இன்று 4-வது நாளாக அவர் விரதமிருக்கிறார். அவருடன் வந்த துறவிகள் அனைவரும் 24 மணி நேரமும் அருகில் இருந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். சுப்ரமத் பிரபாவதி மாதாஜி வடக்கு நோக்கி தலைவைத்து படுத்துள்ளார்.

    ஜீவசமாதி அடைவதற்காக பெண் துறவி உணவு, தண்ணீர் இன்றி விரதம் இருக்கும் தகவல் அறிந்ததும் செஞ்சி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாதாஜியிடம் ஆசி பெற்றும் வணங்கியும் செல்கின்றனர்.

    இவர் ஜீவசமாதி நிலையை எட்டியதும் கொப்பரை தேங்காய், சந்தனகட்டை, நெய், கற்பூர கட்டிகள் ஆகிவை மூலம் சிதைமூட்ட மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டம் திருமலை அரிஹந்தகிரி மடத்தில் ஜெயின் மதத்தை சேர்ந்த 72 வயது பெண் துறவி, ஜீவசமாதி அடைவதற்காக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட திருமலை கிராமத்தில் திருமலை ஜெயினர் மடம் உள்ளது. போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 72 வயதான மாதாஜி என்கிற ஜெயின் துறவி வந்துள்ளார். அவர் இங்கு ஜீவசமாதி அடைவதற்காக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். இன்னும் 2 நாளில் அவர் ஜீவசமாதி அடைந்து விடுவார் என தகவல் பரவியதால் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மாதாஜியிடம் அருளாசி பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருமலை ஜெயின் மடாலய மடாதிபதி தவளகீர்த்தி சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பவாரிதேவி என்கிறவர் கடந்த 2010-ல் தாய், தந்தையர், கணவரையும் துறந்தார். பின்னர் ஜெயின் மதத்தில் துறவியானார். அவர் சுல்லிகா ஸ்ரீ 105 ஸ்ரீசுகுந்தன்மதி மாதாஜி என்ற பெயருடன் கடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் ஆலயங்களுக்கு சென்று பல ஊர்களில் ஜெயின் மதத்தின் பெருமைகளை விளக்கி வருகிறார்.

    இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி மாதாஜியாக தீட்சை பெற்றார். இவரது தாயார் பெயர் சோசார்பாய், தந்தை ராம்சந்திரசுக்குவால், கணவர் பெயர் கன்யாலால் ஜெயின். இவர் பிறந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் லக்னாபூர், சவாயி மத்பூர் ஆகும்.

    இவர் கடந்த 31-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தார். திருமலை அரிஹந்தகிரி ஜெயின் மடத்தில் வந்து தங்கியுள்ள அவர், விரைவில் ஜீவ சமாதி ஆவதாக கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். அவரை தற்போது 12 மாதாஜிகள் கவனித்து வருகின்றனர். இரண்டொரு நாட்களில் ஜீவ சமாதி அடைந்துவிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×