search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jeeva samadhi"

    வந்தவாசி அருகே 5-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து தவத்தில் இருந்த 102 வயது மூதாட்டி ஜீவசமாதி அடைந்தார்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 102). இவர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இவர்களுக்கு தேவதத்தை, சுசீலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர்.

    பொன்னுசாமி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து செய்யாறு அடுத்த வேலியநல்லூர் கிராமத்திலுள்ள இளைய மகள் சுசிலா வீட்டில் கடந்த 43 ஆண்டுகளாக விஜயலட்சுமி வசித்து வந்தார்.

    கடந்த 7 ஆண்டுகளாக எறும்பூர் கிராமத்தில் உள்ள மற்றொரு மகள் நாகரத்தினம் வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜீவசமாதி அடைய முடிவெடுத்தார். அதன்படி கடந்த 11-ந்தேதி வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்திலுள்ள குந்தகுந்தர் விசாகா சார்யர் தவ நிலையத்திற்கு சென்ற அவர் எவ்வித உணவுகளையும் உட்கொள்ளாமல் தவம் மேற்கொண்டார். 5-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து தவத்தில் இருந்த அவர் ஜீவசமாதி அடைந்தார்.

    பின்னர் உறவினர்கள் அதே பகுதியில் மூதாட்டி உடலை அமர்ந்த நிலையில் வைத்து கொப்பரைத் தேங்காய், தேங்காய் மூடி சந்தனக்கட்டை, நெய் மூலமாக எரியூட்டினர்.



    செஞ்சி அருகே ஜீவசமாதி அடைய பெண் துறவி இன்று 4-வது நாளாக சாப்பிடாமல் விரதமிருக்கிறார். அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாதாஜியிடம் ஆசி பெற்றும் வணங்கியும் செல்கின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேல் சித்தாமூர். இங்கு தமிழக ஜெயினர்களின் தலைமை பீடமான ஜினகஞ்சி ஜெயின் மடமும், ஆயிரம் ஆண்டு பழமையான மல்லிநாதர், பார்சுவநாதர் ஜெயின் கோவில்களும் உள்ளன.

    வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு யாத்திரை வரும் ஜெயின் துறவிகள் இங்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2 ஜெயின் துறவிகள் தலைமையில் 9 பெண் துறவிகள் தமிழகம் வந்தனர்.

    இவர்களில் ஹவாரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண் துறவி சுப்ரமத் பிரபாவதி மாதாஜி பொன்னூர்மலை, வாழப்பந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெயின் கோவில்களுக்கு சென்று தரிசித்தார்.

    பின்னர் அவர் ஜெயின்மத கோட்பாட்டின்படி உண்ணா நோன்பு இருந்து ஜீவசமாதி அடைய முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து சுப்ரமத் பிரபாவதி மாதாஜி கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பெண் துறவிகளுடன் மேல் சித்தா மூர் மடத்துக்கு வந்தார். அன்று முதல் அவர் 1 வேளை உணவு மட்டும் சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முதல் உணவு மற்றும் தண்ணீர் இன்றி விரதம் இருந்து வருகிறார். இன்று 4-வது நாளாக அவர் விரதமிருக்கிறார். அவருடன் வந்த துறவிகள் அனைவரும் 24 மணி நேரமும் அருகில் இருந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். சுப்ரமத் பிரபாவதி மாதாஜி வடக்கு நோக்கி தலைவைத்து படுத்துள்ளார்.

    ஜீவசமாதி அடைவதற்காக பெண் துறவி உணவு, தண்ணீர் இன்றி விரதம் இருக்கும் தகவல் அறிந்ததும் செஞ்சி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாதாஜியிடம் ஆசி பெற்றும் வணங்கியும் செல்கின்றனர்.

    இவர் ஜீவசமாதி நிலையை எட்டியதும் கொப்பரை தேங்காய், சந்தனகட்டை, நெய், கற்பூர கட்டிகள் ஆகிவை மூலம் சிதைமூட்ட மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டம் திருமலை அரிஹந்தகிரி மடத்தில் ஜெயின் மதத்தை சேர்ந்த 72 வயது பெண் துறவி, ஜீவசமாதி அடைவதற்காக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட திருமலை கிராமத்தில் திருமலை ஜெயினர் மடம் உள்ளது. போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 72 வயதான மாதாஜி என்கிற ஜெயின் துறவி வந்துள்ளார். அவர் இங்கு ஜீவசமாதி அடைவதற்காக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். இன்னும் 2 நாளில் அவர் ஜீவசமாதி அடைந்து விடுவார் என தகவல் பரவியதால் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மாதாஜியிடம் அருளாசி பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருமலை ஜெயின் மடாலய மடாதிபதி தவளகீர்த்தி சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பவாரிதேவி என்கிறவர் கடந்த 2010-ல் தாய், தந்தையர், கணவரையும் துறந்தார். பின்னர் ஜெயின் மதத்தில் துறவியானார். அவர் சுல்லிகா ஸ்ரீ 105 ஸ்ரீசுகுந்தன்மதி மாதாஜி என்ற பெயருடன் கடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் ஆலயங்களுக்கு சென்று பல ஊர்களில் ஜெயின் மதத்தின் பெருமைகளை விளக்கி வருகிறார்.

    இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி மாதாஜியாக தீட்சை பெற்றார். இவரது தாயார் பெயர் சோசார்பாய், தந்தை ராம்சந்திரசுக்குவால், கணவர் பெயர் கன்யாலால் ஜெயின். இவர் பிறந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் லக்னாபூர், சவாயி மத்பூர் ஆகும்.

    இவர் கடந்த 31-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தார். திருமலை அரிஹந்தகிரி ஜெயின் மடத்தில் வந்து தங்கியுள்ள அவர், விரைவில் ஜீவ சமாதி ஆவதாக கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். அவரை தற்போது 12 மாதாஜிகள் கவனித்து வருகின்றனர். இரண்டொரு நாட்களில் ஜீவ சமாதி அடைந்துவிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×